Rachitha Mahalakshmi
Rachitha Mahalakshmi PT Desk
குற்றம்

“ஆபாசமாக பேசி மிரட்டுகிறார்” கணவர் மீது சின்னத்திரை நடிகை ரட்சிதா பரபரப்பு புகார்!

webteam

தமிழ், கன்னடம் என பல மொழிகளில் டிவி சீரியல்களில் நடித்தும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றும் பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியலில் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூரை அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

Dinesh - Rachitha Mahalakshmi

அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த இடைவெளியில் திரைக்கு இடைவெளி விட்டிருந்த ரட்சிதா, கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த ரட்சிதா, சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் சில ஷோக்களில் வர்ணனையாளராகவும் இருந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரட்சிதா புகார் ஒன்றை அளித்தார். அதில், “நான் தினேஷை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக எனது செல்போனுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது மற்றும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுவது என்று அவர் உள்ளார்” என புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் தினேஷை விசாரணைக்கு அழைத்தனர்.

police station

காவல் நிலையம் வந்த தினேஷ், “ரட்சிதாவிற்கு வேண்டுமானால், விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடிக் கொள்ளலாம்” என தெரிவித்துவிட்டு சென்றார். இந்த புகார் தொடர்பாக ரட்சிதாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கணவரே தனக்கு மிரட்டல் கொடுப்பதாக ரட்சிதா புகார் அளித்திருப்பது, சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.