குற்றம்

`மீண்டும் இருளுக்குள் இழுக்க முயற்சி’- சர்ச்சைக்குள்ளான உடை குறித்து நடிகை பாவனா விளக்கம்

நிவேதா ஜெகராஜா

சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு, நடிகை பாவனா மலையாளத்தில் 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ன்னு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், பாவனாவுக்கு சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் `கோல்டன் விசா' வழங்கப்பட்டது. இந்த விழாவில், நடிகை பாவனா அணிந்திருந்த உடை சமூகவலைதளங்களில் ட்ரோல் ஆக்கப்பட்டு வருகிறது.

தன் மீது எழுந்த இந்த சைபர் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் பாவனா தனது சமூகவலைதளபக்கத்தில் பதிவொன்றை போட்டிருக்கிறார். அதில் அவர், “எனக்கானவர்கள் யாரும் காயமடையாமல் இருக்கவும், ஒரு நாள் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பவும் நான் முயற்சித்து கொண்டிருக்கும்போது, இப்படியான சிலர் அவர்களின் எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மூலம் என்னை மீண்டும் இருளுக்குள் இழுக்க முயற்சிக்கின்றனர்.

நான் என்ன செய்தாலும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னை விமர்சிப்பதன் மூலம் என்னை இவர்கள் இருளுக்குள் தள்ளுவதை உணர்கையில் மிகவும் வேதனையாக இருக்கிறது. ஆனால் இதுபோன்ற செயல்கள் மூலம்தான் அவர்கள் மகிழ்ச்சி காண விரும்புகின்றனர் என்றால், நான் அவர்களைத் தடுக்கவில்லை" என்றுள்ளார்.

இவர்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த உடையில், பாவனா ஆடைக்கு உள்ளே அவர் எந்த உடையும் அணியவில்லை என்று  பலரும் அவரை கமெண்ட் செய்து அவரை மோசமாக விமர்சித்துள்ளனர். அவற்றுக்கு விளக்கமளித்துள்ள பாவனா, `நான் என் சருமத்தின் நிறத்தில் ஆடை அணிந்திருந்தேன். மற்றபடி இவர்கள் குறிப்பிடுவது போல நான் ஆடை அணியவில்லை. அப்படி அணியும் நபரும் நானில்லை. இந்த வகை உடைகளை பயன்படுத்தியோருக்கு இதுகுறித்து தெரிந்திருக்கும்’ என குறிப்பிட்டிருக்கிறார்.