ஹரீஸ் கல்யாண், எம்.எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் பார்க்கிங். கார் பார்க்கிங் பிரச்னையால், இருவரின் ஈகோவும் எந்த அளவிற்கு உச்சத்தை அடைகிறது என்பதை விவரிக்கும் இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன், பார்க்கும் பார்வையாளர்களுக்கும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது என்பதில் மாற்று கருத்தில்லை. இதுப்போல பிரபல நடிகையின் உறவினர் ஒருவர் வீட்டின் வெளியே நடந்த பார்க்கிங் பிரச்னையால், கொலையே செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் ஹூமா குரேஷி. இவர் தமிழில் காலா திரைப்படத்தில் நடத்துள்ளார். இவரது நெருங்கிய உறவினரான ஆசிப் குரேஷி நிஜாமுதின் பகுதியில் வசித்துவருகிறார். இவர் கோழி வியாபாரத்தை செய்து வந்துள்ளார்.
கடந்த வியாழன்கிழமை இரவு 11 மணியளவில், ஆசிப்பின் வீட்டின் முன்பு, அண்டை வீட்டாரின் பைக் நிறுத்தப்பட்டுள்ளது. பைக்கை எடுக்குமாறு ஆசிப் கூறிய நிலையில், இருதரப்பினரிடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
வாய்க்கலப்பு கைக்கலப்பாக மாறவே, ஆசிப் குரேஷியை சண்டையிட்ட நபர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, ஆசிப் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆசிப்பின் உறவினர்கள் தெரிவிக்கையில், குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஆசிப்பை இறக்கமின்றி குத்தி கொலை செய்தனர் என்று கண்கலங்க தெரிவித்தனர்.
வியாழக்கிழமை இரவு என்ன நடந்தது என்பதை விவரித்த ஆசிஃபின் மனைவிகளில் ஒருவரான ஷாஹீன், "இரவு 9:30-10 மணியளவில், பக்கத்து வீட்டுக்காரர் எங்கள் வீட்டிற்கு வெளியே ஒரு ஸ்கூட்டரை நிறுத்தினார்... என் கணவர் ஆசிஃப், வாகனத்தை நகர்த்துமாறு அவரிடம் கேட்டார். ஆனால், அவர் ஆசிப்பை மிரட்டினார்.
சில நிமிடங்களிலேயே அந்த நபர், அவரது சகோதரருடன் சேர்ந்து வந்து ஆசிஃப்பை கூர்மையான ஆயுதத்தால் குத்தினார். நான் என் மைத்துனர் ஜாவேத்தை அழைத்தேன், ஆனால் அவர் அங்கு சென்றடையும் நேரத்திலேயே ஆசிப்பின் உடலிருந்து நிறைய ரத்தம் வெளியேற ஆரம்பித்தது. " என்று அவர் கூறினார்.
இந்த சம்பவத்தை விவரித்த ஹுமா குரேஷியின் தந்தையும் ஆசிஃபின் மாமாவுமான சலீம் குரேஷி, “இரண்டு பேர் வீட்டின் முன் ஒரு ஸ்கூட்டரை நிறுத்தினார்கள். ஆசிப் அவர்களை அதை ஓரமாக நகர்த்தவும், நுழைவாயிலை மூட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். இது வாய்த் தகராறாக மாறி, பின்னர் கை சண்டையாக மாறியது. அவர்கள் இருவரும் சேர்ந்து என் மருமகனைக் கொன்றனர்” என்று கூறினார்.
இந்த சம்பவம் குறித்து நடிகை ஹுமா குரேஷி இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 103(1) மற்றும் 3(5) இன் கீழ் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தநிலையில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தொடர் விசாரணையும் நடத்தி வருகின்றனர். ஆசிஃபின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.