குற்றம்

மத்திய மாநில அரசில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடி வரை மோசடி - இளைஞர் கைது

webteam

மத்திய மாநில அரசில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடி மோசடி செய்த இளைஞரை ஆவடி மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த பண்னைவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு (41). இவரது மனைவி ஆசிரியர் படிப்பு படித்துள்ளதால் வேலைக்காக முயற்சித்து வந்துள்ளார். இந்நிலையில், ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் அலுவலகம் நடத்தி வரும் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (31) என்பவர் ரெயில்வே, வங்கி, மின்வாரியம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

அதை நம்பிய ரகு தனது மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தரும்படி ரூ.12 லட்சத்தை கார்த்திகேயனிடம் கொடுத்துள்ளார். அதேபோல் தனது உறவினர்களான அதே பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோரிடம் 4 லட்சம் முதல் 36 லட்சம் வரை வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட கார்த்திகேயன் சொன்னது போல் ஒருவருக்கும் அரசு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டார். இது பற்றி ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் ரகு புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் மத்திய குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப் பதிவு செய்து தலைமறைவான கார்த்திகேயனை தேடி வந்தார். இந்த நிலையில் சென்னை ஆதம்பாக்கம் பாலாஜி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த கார்த்திகேயனை அதிரடியாக கைது செய்தார். இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது இதுபோல் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 1 கோடியே 11 லட்சத்தி 40 ஆயிரம் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கைதான கார்த்திகேயன் சிறையில் அடைத்தனர்.

மத்திய மாநில அரசுகளில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது