கத்தியால் குத்திய இளைஞர்
கத்தியால் குத்திய இளைஞர் சாந்த குமார்
குற்றம்

பட்டப் பகலில் கல்லூரி மாணவியின் கழுத்தில் கத்தியால் குத்திய இளைஞர்! சென்னையில் பகீர் சம்பவம் #Video

PT WEB

சென்னை பரங்கிமலை கலைஞர் நகரை சேர்ந்தவர் நவீன். இவர் தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவியை காதலித்து வந்ததாகவும், அதனை அவர் ஏற்காததாகவும் கூறப்படுகிறது.

கத்தியால் குத்திய இளைஞர்

இன்று வழக்கம்போல் அடையாறில் உள்ள கல்லூரிக்கு சென்று விட்டு அந்த மாணவி வீடு திரும்பியுள்ளார். அப்போது மாணவியை பரங்கிமலை ஏழு கிணறு இரண்டாவது பிரதான சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்த நவீன் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

கத்தி

வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென நவீன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார்.

அங்கிருந்த பொதுமக்கள் மாணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குடியிருப்புகளின் மாடிகளில் ஏறி தப்ப முயன்ற குற்றவாளி!

இது குறித்து தகவல் அறிந்த நந்தம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். நவீன் செல்போன் சிக்னலை வைத்து தேடிய நிலையில், போலீஸ் தேடுவதை அறிந்து கொண்ட நவீன் போலீசாரை கண்டு தப்பி ஓடி உள்ளார்.

குடியிருப்பு பகுதிகளின் மாடிகளில் ஏறி தப்பிச்சென்ற நவீனை, சினிமா பாணியில் துரத்திச் சென்ற போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அப்போது நவீன் கீழே விழுந்ததில் மயக்கம் அடைந்தார் உடனே போலீசார் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்!

பட்டப் பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்தபோதே மாணவியை கத்தியால் குத்தி தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில நாட்களுக்கு முன்பு பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதல் விவகாரத்தில் பெண்ணை ரயிலின் முன் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது இந்த கொலை முயற்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.