சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார் குளம் கிராமத்தில், நிலத்தகராறில் ஒருவரை அரிவாளால் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மருதையா என்பவருக்கும் கடந்த ஐந்து வருடங்களாக நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை தங்கராசு நிலத்திற்கு வந்த மருதையாவை என்னுடைய இடத்துக்கு நீங்கள் வரக்கூடாது என வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் முற்றி மருதையா, தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் தங்கராசுவை வெட்டியுள்ளார்.
இந்த காட்சியை செல்போனில் படம் பிடித்த தங்கராசுவின் மகள் கண்முன்னால் தந்தை வெட்டப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர் ஓடி வந்ததும் மருதையா அங்கிருந்து தப்பியோடினார். அரிவாளால் வெட்டும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் வெட்டுப்பட்ட தங்கராசு பலத்த காயங்களுடன் திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெட்டிய மருதையாவை தேடி வருகின்றனர்.