குற்றம்

’400புடவைகள்..தங்க நகைகள்’..வீட்டை பூட்டிச் சென்ற ஜவுளி வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி

webteam

அரியலூரில் ஜவுளி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள 400 புடவைகள் மற்றும் 4 சவரன் நகைகள் திருட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவர், புடவை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 30ஆம் தேதி சென்னையில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டுச் சென்றிருந்தனர்.

இந்நிலையில், இன்று ஊர் திரும்பிய அவர்கள் வீட்டை வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் திருடு போயிருந்தன. இது குறித்து ஆண்டிமடம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 400 காட்டன் புடவைகள் 4 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.  இந்த மர்ம நபர்கள் குறித்து ஆண்டிமடம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.