குற்றம்

வாடகைக்கு வீடுகேட்பது போல நகை திருடிய நிறைமாத கர்ப்பிணி... சென்னையில் பரபரப்பு

webteam

வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து பத்து சவரன் திருடி சென்றுள்ளார் நிறைமாத கர்ப்பிணியொருவர். அவரை கைது செய்து, பின் ஜாமினில் விடுவித்தனர் காவல்துறையினர்.

சென்னை மதுரவாயில் கார்த்திகேயன் நகர் பகுதியை சேர்ந்தவர் உஷா. இவரது வீட்டிற்கு நிறைமாத கர்ப்பிணியொருவர், வீடு வாடகைக்கு உள்ளதா என்று கேட்டு சென்றுள்ளார். அதற்கு உஷா, `வீடு வாடகைக்கு இல்லை’ என தெரிவித்ததை அடுத்து அக்கர்ப்பிணி கழிவறையை பயன்படுத்தி கொள்கிறேன் என்று கேட்டுள்ளார். அவரும் சரி பயன்படுத்தி கொள்ளுங்கள் என்றுகூறி, அந்த பெண்ணை வீட்டின் உள்ளே அனுமதி அளித்துள்ளார்.

அந்த கர்ப்பிணி நீண்ட நேரம் ஆகியும்  வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உள்ளே சென்று பார்க்கும்போது, அங்கு அக்கர்ப்பிணி உஷாவின் பீரோவில் இருந்த 10 சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை அவர் அணிந்திருந்த துணியில் மறைத்து வைத்துள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்ததுடன் மதுரவாயில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிறைமாத கர்ப்பிணியை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

அதன் பிறகு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெயர் மாலதி என்பதும் மதுரவாயல் ஜானகி நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஏற்கனவே இவர் ஈடுபட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.நிறைமாத கர்ப்பிணி என்ற ஒரே காரணத்தினால் போலீசார் அவருடைய வீட்டில் தகவல் தெரிவித்து, பின் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.