குற்றம்

 “அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுங்கள்” - காவல்துறையில் ஈஷா புகார்

 “அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுங்கள்” - காவல்துறையில் ஈஷா புகார்

webteam
ஈஷாவுக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகக் காவல்துறையிடம்  புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இக்கட்டான மற்றும் சவாலான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 21-ம் நடந்த ஈஷா மஹாசிவராத்திரி விழாவை தொடர்புப்படுத்தி, சில ஊடகங்கள், சில அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சமூக வலைத்தளங்களில் பல தவறான செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர். 
பொதுவாக, ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால் அதிகபட்சம் 14 நாட்களுக்குள் அதற்கான அறிகுறி வெளியில் தெரிந்துவிடும் என்பது அனைவரும் அறிந்ததே. இது தெரிந்தும், ஈஷா மஹாசிவராத்திரி விழா நடந்து முடிந்து 40 நாட்கள் ஆன பிறகு, பொது அமைதியைச் சீர்குலைக்கும் விதமாக, ஆதாரமற்ற வதந்திகள் பரப்புவதை ஈஷா அறக்கட்டளை வன்மையாகக் கண்டிக்கிறது. 
இந்தச் செயல் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தையும், பீதியையும் கிளப்பும் வகையில் உள்ளது. மேலும், ஈஷாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்துடனும் இது திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, போதிய விளக்கங்களை ஈஷா அறக்கட்டளை பத்திரிகை செய்திகள் மூலம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. 
இத்தகைய சூழலில், பேஸ்புக், ட்விட்டர், யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்கள், ஆன்லைன் செய்தி ஊடகங்கள், அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் ஈஷாவுக்கு எதிராக அவதூறு செய்தி வெளியிட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை ஆதாரமாகவும் அளித்துள்ளோம். இதன் அடிப்படையில், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை உறுதி அளித்துள்ளது. 
இந்த இக்கட்டான மற்றும் சவாலான சூழலில் அனைத்து ஊடகங்கள் மற்றும் தனிநபர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.