குற்றம்

எந்த தகவலும் கொடுக்கவில்லை.. அப்படி இருந்தும் பறிபோன பணம் - திடுக்கிட வைத்த சென்னை மோசடி

எந்த தகவலும் கொடுக்கவில்லை.. அப்படி இருந்தும் பறிபோன பணம் - திடுக்கிட வைத்த சென்னை மோசடி

JustinDurai
சென்னை மருத்துவரிடம் நூதன முறையில் வங்கிக் கணக்கிலிருந்து 2.4 லட்சம் ரூபாய் திருடிய மோசடிக் கும்பல் குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த மருத்துவர் சாந்தினி பிரபாகர், அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், என்னுடைய செல்போன் எண்ணிற்கு கே.ஒய்.சி எனப்படும் வாடிக்கையாளர் பற்றி முழு தகவல் அளிக்க வேண்டும் என ஒரு புதிய எண்ணில் இருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அந்த தகவல்களை கொடுக்காவிட்டால் உங்கள் சிம் கார்டு செயலிழந்துவிடும். எனவே அவர்கள் அளித்திருந்த எண்ணிற்கு வாடிக்கையாளர் சேவை மையம் என நம்பி செல்போனில் அழைத்தேன்.
அப்போது அந்த அழைப்பில் பேசிய நபர் க்விக் சப்போர்ட் எனப்படும் செயலி லிங்க் ஒன்றை அனுப்புவதாகவும், அதன் மூலம் 10 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் சிம் கார்டு சேவை துண்டிக்கப்படாது எனக் கூறினார்கள். அதனை நம்பி அவர்கள் அனுப்பிய செயலியை பதிவிறக்கம் செய்து,10 ரூபாய் பணத்தையும் வங்கி மூலம் ஆன்லைனில் அனுப்பினேன். அந்த செயலி மூலம் பணம் அனுப்பப்பட்டதாக ரசீது ஆன்லைனில் வந்தபிறகு வாடிக்கையாளர் தகவல் மையத்துடன் பேசிக்கொண்டிருந்த அழைப்பை துண்டிக்க முடியவில்லை.
அதன்பிறகு சில நிமிடங்களில் எனது வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்ச ரூபாய், 90 ஆயிரம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் என அடுத்தடுத்து பணம் எடுக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்ததால் அதிர்ச்சியடைந்தேன். அதன்பின்னும் தனது செல்போனை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. அப்போதுதான் செல்போனை ஹேக் செய்து உள்ளார்கள் என்பதை அறிந்து கொண்டேன். இதுகுறித்து உடனடியாக வங்கி கணக்கு வைத்திருக்கும் எஸ்.பி.ஐ வங்கிக்கு தொடர்பு கொள்ள முடியாமலும் அதே நேரத்தில் மற்றவர்களிடம் தொடர்புகொண்டு உதவி கேட்க முடியாமலும் போன் முடக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து லேண்ட்லைன் மூலமாக எஸ்.பி.ஐ வங்கிக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தேன். வாடிக்கையாளர் மையம் என தொடர்பு கொண்ட எண் இண்டர்நெட் மூலமாக பேசப்படும் அழைப்பு என்பதும் தெரியவந்தது. ட்ரூ காலர் செயலி மூலம் பேசிய நபர் யார் என்று பார்க்கும் போது கூட வோடோபோன் கே.ஒய்.சி சர்வீஸ் என்ற பெயரே இருந்தது. மேலும் ஓடிபி அல்லது கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், வங்கிக் கணக்குகள் தொடர்பான எந்த தகவலையும் வாடிக்கையாளர் மையம் என கருதி பேசியவரிடம் தெரிவிக்காமலேயே பணம் திருடப்பட்டுள்ளது'' என சாந்தினி பிரபாகர் புகாரில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில், ''சிம்கார்டு நிறுவனங்களிலிருந்து குறுஞ்செய்தி வருவதுபோல் தனியார் எண்ணில் இருந்து சிலர் குறுஞ்செய்திகள் அனுப்புகின்றன. குறிப்பாக கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் இல்லையெனில் சிம் கார்டு செயலிழந்து விடும் என்ற குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு மோசடி நடக்கின்றன. சமீபகாலமாக அதிகாரப்பூர்வ சிம் கார்டு நிறுவனங்களிலிருந்து வராத குறுஞ்செய்தியை நம்பி பலரும் இதுபோல் ஏமாந்து உள்ளதனர்.
குறிப்பாக இந்த மோசடி கும்பல் "டீம் வ்யூவர்" போன்ற பல செயலிகளை பயன்படுத்தி பணத்தைச் செலுத்தினால் சிம் கார்டு சேவையை தொடர்ந்து பெறலாம் என கூறி ஏமாற்றுகின்றன. இந்தச் செயலிகள் பதிவிறக்கம் செய்யும் நபர்களின் செல்போனில் வங்கி அட்டை உள்ளிட்ட தகவல்கள் அனைத்து தகவல்களும் அவர்களுக்கு கிடைத்து விடுகிறது. மேலும் நமது செல்போனை நமக்கு தெரியாமலயே ஹாக் செய்து ஓடிபி உள்ளிட்ட முக்கிய தகவல்களை திருடி பணத்தை கொள்ளை அடிப்பதை ஒரு சில நிமிடங்களில் செய்து முடிக்கின்றனர்'' எனத் தெரிவித்தனர்.