குற்றம்

உசிலம்பட்டி: குழந்தை திருமணத்தால் 14 வயதில் தாயான சிறுமி; குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

webteam

உசிலம்பட்டி அருகே 14 வயது குழந்தைக்கு பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை திருமணம், போக்சோ உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போலக்காபட்டியைச் சேர்ந்த பெரியகருப்பன் என்பவரது மகன் உதயக்குமார். உதயகுமாருக்கு, தேனியைச் சேர்ந்த மணி - சந்திரா தம்பதியின் 14 வயது மகளை கடந்த ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி திருமணம் செய்து வைத்துள்ளனர். குழந்தை திருமணம் என்பதை மறைத்து திருமணம் நடத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த திருமண நிகழ்வுக்குப்பின், போலக்காபட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் இருவரும் வசித்து வந்துள்ளனர். அப்படியான சூழலில் அச்சிறுமி கர்ப்பிணியாகியுள்ளார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த இந்த அந்த 14 வயது குழந்தைக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டதாகவும், போலக்காபட்டியில் உள்ள உதயக்குமார் வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்து சற்று நேரத்தில் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், உயிரிழந்த குழந்தையை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைத்தது தொடர்பாகவும், 14 வயது குழந்தையை கர்ப்பிணியாக்கியது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.