குற்றம்

ம.பி: தலைக்கேறிய போதையில் 90 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்!

Sinekadhara

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக வயது வரம்பின்றி பெண்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது குறித்து செய்திகள் வந்தவண்ணமே உள்ளன. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் 90 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய பிரதேச மாநில ஜபால்பூரிலுள்ள கோராக்புர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. ஷாந்தி பகுதியில் 90 வயது மூதாட்டி தனது மகளுடன் குடிசையில் வசித்து வந்துள்ளார். தினக்கூலி வேலைக்கு செல்லும் மகள் வீட்டில் இல்லாத நேரத்தில், மூதாட்டி தனியாக இருந்தபோது, அருகில் ஒரு குடிசையில் வசிக்கும் ராஜ்குமார்(52) என்ற நபர் மூதாட்டியின் குடிசைக்கு வந்துள்ளார்.

போதை நிலையில் சுயநினைவற்று இருந்த ராஜ்குமார் மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இதனால் மூதாட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள அரசு மருத்துவமனையில் மூதாட்டி தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதுகுறித்து மூதாட்டியின் மகள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் திங்கட்கிழமை கோரக்பூர் நகர போலீசார் ராஜ்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் குற்றவாளிமீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடரப்பட்டுள்ளது.