குற்றம்

டெல்லி: வீட்டில் தனியாக இருந்த 87 வயது மூதாட்டிக்கு நேர்ந்த சோகம் - 30 வயது இளைஞர் கைது

Sinekadhara

டெல்லியில் படுக்கையிலிருந்த 87 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.

டெல்லியின் திலக் நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. துப்புரவுத்தொழில் செய்துவரும் அந்த இளைஞர் மூதாட்டி வசித்துவந்த பகுதியில் துப்புரவுப்பணிகளை செய்துவந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.15 மணியளவில் மூதாட்டியின் மகள் வெளியே சென்றுள்ளார். பிறகு 2 மணியளவில் அவர் வீட்டிற்கு வந்தபோது, தனது தாயாரின் மூக்கிலிருந்து ரத்தம் வருவதை கவனித்திருக்கிறார். மேலும் வீட்டிலிருந்த செல்போன் காணாமல் போனதும் தெரியவந்திருக்கிறது. உடனே அக்கம்பக்கத்திலிருந்த உறவினர்களை அழைத்ததோடு போலீசுக்கும் தகவல் கொடுத்திருக்கிறார்.

அப்போது யாரோ தெரியாத நபர் வீட்டிற்குள் சென்றதை கவனித்ததாக உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சிசிடிவி காட்சிகளை பரிசோதித்ததில், வீட்டிற்குள் சென்றது துப்புரவுத் தொழில் செய்யும் இளைஞர் என்பது தெரியவந்திருக்கிறது. மேலும் அவர் படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன் அங்கிருந்த செல்போனையும் திருடிச்சென்றதும் தெரியவந்திருக்கிறது. தகவலறிந்த 16 மணிநேரத்தில் தலைமறைவாக இளைஞரை போலீசார் தேடிக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.