குற்றம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - வளர்ப்பு தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை

Sinekadhara

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தைக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஷபி. இவர் கணவரை பிரிந்து 13 வயது மகளுடன் வசித்துவந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ஒரே வீட்டில் வசித்துவந்த இரண்டாவது மனைவியின் மகளை ஷபி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இத்தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் பழைய வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு விசாரணை சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் நீதிபதி எம்.ராஜலட்சுமி பிறப்பித்த தீர்ப்பில், ஷபிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளார்.