குற்றம்

வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - 60 வயது முதியவர்மீது போக்சோ

Sinekadhara

மதுரையில் 16 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி வசிக்கும் வீட்டிற்கு அருகே 60 வயதான முதியவர் ராசு தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சிறுமியின் குடும்பத்தினர் கூலி வேலை செய்வதால் பள்ளி மாணவி வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளி மாணவி தனியாக இருப்பதை முதியவர் ராசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நாளடைவில் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் உடல்நலக்குறைவால் கடுமையாக பதிக்கப்பட்ட 16 வயது மகளை பெற்றோர் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 16 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது குறித்து குழந்தைகள் நலக்குழு மற்றும் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மருத்துவர்கள் தகவல் கொடுத்ததின் பேரில் சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சிறுமி மற்றும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமியை பல மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய முதியவர் ராசுவை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.