குற்றம்

பண மோசடி: முன்னாள் அமைச்சர் உதவியாளர் உள்பட 58 பேர் மீது வழக்குகள் பதிவு

Sinekadhara

அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் உதவியாளர் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரயில்வே, வங்கி போன்ற அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாகக்கூறி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்து வருவதாக காவல்துறைக்கு புகார்கள் குவிந்தன. இதனையடுத்து தமிழக டிஜிபி உத்தரவின் பேரில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இதுவரை தமிழகம் முழுவதும் வேலை வாங்கி தருவதாகக்கூறி பண மோசடி செய்ததாக 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் உதவியாளரான தஞ்சையை சேர்ந்த சேஷாத்திரி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பெயரில் மோசடியில் ஈடுபட்ட ஹரிநாத், தலைமைச் செயலக ஊழியர் கண்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதியின் மூன்றாவது மனைவி ராணி எலிசபத் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.