accused
accused pt desk
குற்றம்

குமுளி: சந்தேகத்திற்கிடமாக நடந்து வந்த முதியவர் - சோதனையில் சிக்கிய 500 கிராம் தங்கம் பறிமுதல்

webteam

தேனி மாவட்டம் தமிழக கேரளா எல்லையான குமுளி பேருந்து நிறுத்த பகுதியில் கேரளாவில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கடத்திவரப்பட்ட 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 503 கிராம் எடையுள்ள ஒரு தங்க பிஸ்கட்டை தமிழக குமுளி போலீஸார் பறிமுதல் செய்தனர்.

police

தமிழக கேரளா எல்லையான தேனி மாவட்டம் குமுளி சோதனைச் சாவடியில் தமிழக குமுளி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்து தமிழகத்தை நோக்கி முதியவர் ஒருவர் நடந்து வந்துள்ளார். இந்நிலையில் போலீசார், சோதனையில் ஈடுபட்டதைக் கண்டதும் பதுங்கிய அவரை சந்தேகத்தின் பேரில் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரை சோதனையிட்டபோது அவரது வயிற்றுப் பகுதியில் தங்க பிஸ்கட் ஒன்று கயிற்றால் கட்டப்பட்டு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அந்த தங்க பிஸ்கட் 503 கிராம் எடை கொண்டதாக இருந்தநிலையில், இதன் மதிப்பு சுமார் 35 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. தங்க பிஸ்கட்டை ஆவணங்கள் இன்றி கடத்தி வந்த நபர், மதுரை கோச்சடை மகா கணபதி நகரைச் சேர்ந்த கணேசன் (66) என்பதும் தெரிந்தது. இதனையடுத்து தேனி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

police station

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வருமானவரித் துறையினரிடம் பறிமுதல் செய்த தங்க பிஸ்கட் மற்றும் முதியவர் கணேசனையும் குமுளி காவல்துறையினர் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து கணேசனை தேனிக்கு அழைத்து வந்த வருமான வரித்துறையினர், தங்க பிஸ்கட் எங்கிருந்து வந்தது? எங்கு கொண்டு செல்லப்பட்டது? அதன் பின்னணி என்ன? ஆவணங்கள் இன்றி கடத்தப்பட்டது எதனால்? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.