குற்றம்

கோவை: பைபாஸ் சாலை அருகே முட்புதரில் சடலமாக கிடந்த 5 மாத கர்ப்பிணி பெண்

Veeramani

கோவை சுங்கம் செல்லும் பைபாஸ் சாலையில் உள்ள முட்புதரில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார், அந்த உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது.

நேற்று மாலை அப்பகுதியில் கிடந்த பெண் பிணத்தை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் நேரில் சென்று பிணத்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.



பிணமாக கிடந்த அந்த பெண்ணுக்கு 45 வயது இருக்கும் என தெரிகிறது. இவர் கடந்த சில மாதங்களாக சுங்கம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்து, வீடுகள் முன்பு காயப்போட்டு இருக்கும் துணிகளை எடுத்து அணிந்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார், இதனால் அந்த பகுதிக்கு அவர் பரிச்சயமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில்தான் இவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார், அவரது தலை, கால் பகுதி மற்றும் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. அவரை யாரோ தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் அந்தப் பெண் 5 மாத கர்ப்பமாக இருந்துள்ளார், மனநிலை பாதிக்கப்பட்ட அவர் கர்ப்பமாகி இருந்ததும் , அதே சமயம் கொலை செய்யப்பட்டு கிடப்பதும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். முதல் கட்டமாக அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அந்த பெண்ணை யாராவது அழைத்துச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதா என்பதை பற்றிய விசாரணை நடக்கிறது. மேலும், அந்த பகுதியில் திரியும் ரவுடிகளையும், போதை நபர்களையும் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.