குற்றம்

4-வதாக பிறந்த பெண் குழந்தை கொலை : தந்தை, பாட்டி கைது

webteam

மதுரை அருகே 4-வதாக பிறந்த பெண் குழந்தையை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த தந்தை மற்றும் பாட்டியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பூமேட்டு தெரு பகுதியை சேர்ந்த தவமணி-சித்ரா தம்பதிக்கு ஏற்கெனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி அந்த தம்பதிக்கு 4-வதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய மறு நாள் குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறி பெற்றோர் வீட்டிற்கு அருகேயுள்ள முட்புதரில் புதைத்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடமிருந்து முன்னுக்குப்பின் முரணான பதில்கள் வந்ததை தொடர்ந்து சிசுவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய பரிந்துரை செய்தனர்.

வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம், சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்த ஆரோக்கிய ராஜ் ஆகியோர் முன்னிலையில் மருத்துவக் குழு, புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். அதில் பெண் குழந்தை கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் தந்தையையும் பாட்டியையும் போலீசார் கைது செய்தனர். குழந்தையை கொன்றதை தாய்க்கே தெரியாமால் இருவரும் மறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.