குற்றம்

16 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக 45 வயது நபர் கைது

Sinekadhara

கோவையில் 16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த 45 வயதான நபரை காவல்துறையினர் போக்சோ பிரிவில் கைது செய்தனர்.

கோவை இரத்தினபுரி பகுதியில் தள்ளுவண்டியில் தொழில் செய்து வருபவர் செந்தில். இவருக்கும் 12ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சிறுமியை காதலிப்பதாகக் கூறிய செந்தில் திருமணம் செய்துக்கொள்வதாக ஆசைவார்த்தை கூறி திருப்பதி அழைத்துச்சென்று திருமணமும் செய்துக்கொண்டுள்ளார். தொடர்ந்து சிறுமியை பல இடங்களுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதற்கிடையே, சிறுமியை காணவில்லை எனக்கூறி பெற்றோர் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றனர்.

புகாரின் அடிப்படையில், சிறுமியை தேடிவந்த காவல்துறையினர், திருச்செந்தூரில் சிறுமியையும், அவருடன் இருந்த செந்திலையும் கண்டுபிடித்து கைது செய்தனர். செந்தில் மீது போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.