திண்டுக்கல் வடமதுரை அருகே 4 வயது சிறுமி உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது கொலையா? என்று உறவினர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி கௌரி. இவர்களுக்கு ஷிவானி என்ற 4 வயதில் பெண் குழந்தை இருந்தது. இவர்களது உறவினரான திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குளத்துப் பட்டியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் மனைவி கீர்த்திகா என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வார் என்று கூறப்படுகிறது. அப்போது சிறுமி ஷிவானியுடன், கீர்த்திகா நெருங்கி பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அவர்களின் வீட்டிற்கு வந்த கீர்த்திகா, ஷிவானியை தன்னுடன் ஊருக்கு அழைத்துச் சென்று சிறிது நாள் வைத்திருந்து விட்டு மீண்டும் கொண்டு வந்து விடுவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். குழந்தை இல்லாத கீர்த்திகா கேட்டதால் தனது ஒரே மகள் ஷிவானியை அவரது தாயார் கௌரி அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று ஷிவானி வீட்டில் வழுக்கி விழுந்து காயமடைந்ததாகக் கூறி கீர்த்திகா அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் ஷிவானியை சோதித்த போது உடல் எங்கும் தீக்காயங்கள் இருந்தன. இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிறுமி ஷிவானி சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து வடமதுரை போலீசார் ராஜேஷ் குமார் - கீர்த்திகா தம்பதியினர் குழந்தையை சூடு வைத்து அடித்தாக வழக்கு பதிவுசெய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.