குற்றம்

கோவையில் பழங்குடியின கிராமத்தில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடி - 15 கிலோ பறிமுதல்; 4 பேர் கைது

webteam
கோவையில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் கிராமத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 15 கிலோ எடையுள்ள கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பசுமணி என்ற கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அக்கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் அங்குள்ள நிலத்தில் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு சிலர் கஞ்சா செடிகளை பயிரிட்டுள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்நிலத்தில் ஊடுபயிராக கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரிய வந்தது.
விசாரணையில் கஞ்சா செடிகளை பயிரிட்டது அதே கிராமத்தில் வசிக்கும் செல்லன்(60), பழனிச்சாமி (60), ராஜப்பன் (33) மற்றும் வேலுச்சாமி (26) என்பது தெரியவந்தது. இதை அடுத்து 4 நபர்களையும் கைதுசெய்து அங்கு பயிரிடப்பட்ட 15.3 கிலோ எடை கொண்ட சுமார் 300 கஞ்சா செடிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பசுமணி கிராமத்திற்கு விரைந்துசென்று கஞ்சா செடிகளை பார்வையிட்டு, அக்கிராமத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு போதைப்பொருளான கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.