சென்னை அரும்பாக்கம் பகுதியில் மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 39.5 கிலோ கேட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீசார், மூவரை கைது செய்தனர். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், அவர்கள் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ரவி (47), கணேஷ் (50), மற்றும் திருவள்ளூரைச் சேர்ந்த மதன் (45) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இந்த கும்பல் டெல்லியில் இருந்து மெத், கேட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை வாங்கி போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.51 லட்சம் பணம், 105 கிராம் தங்க நகைகள் மற்றும் 5 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து இவர்களின் பின்னணி குறித்தும், போதைப் பொருள் கடத்தல் நெட்வொர்க் குறித்தும் அரும்பாக்கம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.