குற்றம்

தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என 36 லட்சம் மோசடி

தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என 36 லட்சம் மோசடி

kaleelrahman

தூத்துக்குடியில் தனியார் முதலீட்டு நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி 36 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் பகுதியைச் சேர்ந்த பொன்முனியசாமி (43) என்பவரிடம் மெஞ்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்த சிவராமகிருஷ்ணன், தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த ராஜ் (41) மற்றும் முத்தையாபுரம் தங்கமணி நகரைச் சேர்ந்த நயினார் மனைவி ஜெயலட்சுமி (52) ஆகிய 3 பேரும் கடந்த 01.12.2019 அன்று அறிமுகமாகி தங்களுடைய 'சன்மேக்ஸ்' என்னும் முதலீட்டு நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 10 சதவீதம் லாபம் ஈட்டி தருவதாகக் கூறியுள்ளனர்.

அதன் பேரில் பொன்முனியசாமி 18 லட்சமும், மாரிச்சாமி 5,25 லட்சமும், செல்வராஜ் என்பவர் 7,35 லட்சமும் சந்தனகுமார் என்பவர் 84 ஆயிரமும் குருசாமி என்பவர் 3,78 லட்சமும் மற்றும் ரகுராமன் என்பவர் ரூபாய் 84 ஆயிரம் என மொத்தம் ரூபாய் 36,06 லட்சம் பணத்தை அந்நிறுவனத்தின் வங்கி கணக்கில் முதலீடு செய்துள்ளனர்.

இதனையடுத்து முதலீட்டு தொகைக்கு சில மாதங்கள் வரை 10 சதவீதம் லாபத்தை மட்டும் கொடுத்துவிட்டு, பின்பு அவர்களின் முதலீட்டு தொகை நஷ்டம் அடைந்து விட்டதாகவும் முதலீட்டு பணத்தை திருப்பித் தர முடியாது எனவும், பணம் கேட்டு வந்தால் வழக்கு தொடர்வதாகவும் மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

இதுகுறித்து பொன் முனியசாமி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.