குற்றம்

சென்னை: சோதனையில் சிக்கிய 350 கிலோ குட்கா பறிமுதல்; இருவர் கைது

kaleelrahman

சென்னை புறநகர் பகுதிகளில் குட்கா விற்பனை நடைபெறுவதாக எழுந்த புகாரை அடுத்து, அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் 350 கிலோ குட்காவை பறிமுதல் செய்து இருவரை கைது செய்துள்ளனர். 


சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, காமராஜநகர், பாலவேடு, முத்தாபுதுபேட்டை போன்ற பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெற்று வருவதாக எழுந்த புகாரை அடுத்து, அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் தீபா சத்தியன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாக திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின்போது ஆவடியில் விற்பனைக்காக கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோவும் முத்துப்பேட்டை பகுதியில் 200 கிலோ குட்கா பொருட்களையும் கண்டுபிடித்து, பறிமுதல் செய்த குட்கா பொருட்களை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். 


இது தொடர்பாக ஆவடியைச் சேர்ந்த மகேந்திர குமார் என்பவரையும் முத்தாபுதுபேட்டை பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் எங்கிருந்து குட்கா பொருட்கள் கொண்டுவரப்பட்டது, குட்கா கடத்தலில் தொடர்புடையவர்கள் யார் யார் என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.