குற்றம்

தஞ்சை: முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டிக்கொலை - போலீசில் சரணடைந்த 3 ரவுடிகள்

Sinekadhara

தஞ்சை அருகே முன்விரோதம் காரணமாக ரவுடியை வெட்டிக்கொலை செய்துவிட்டு மூன்று பேர் பாபநாசம் நீதி மன்றத்தில் சரண் அடைந்தனர்.

தஞ்சை கீழவாசல் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ளன. குறிப்பாக 2018ஆம் ஆண்டு எலும்பு தினேஷ் என்ற ரவுடியின் தம்பி தமிழ்செல்வனை கடத்திச்சென்று புது ஆற்றில் அமுக்கி கொலை செய்து உள்ளார். இதனால் எலும்பு தினேஷ் மற்றும் அவனது கூட்டாளிகள் இளனி மணிகண்டன், கிரன் ஆகியோர் மனோகரனை பழி தீர்க்க காத்து இருந்தனர். இவர்கள் மீதும் பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கு தொடர்பாக இரு தரப்பினரும் கடந்த வாரம் நீதிமன்றம் வந்தபோது ஒருவருக்கு ஒருவர் சவால் விட்டு கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 21ஆம் தேதி ஒரு துக்க வீட்டில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அன்று இரவு மனோகரன் இளனி மணிகண்டனுக்கு போன் செய்து, ’உன்ன போட வந்துட்டு இருக்கேன்’ என கெத்தாக பேசி விட்டு போய் இருக்கிறார். மனோகரனை எதிர்பார்த்து காத்திருந்த இளனி மணிகண்டன், கிரன், விஜய் ஆகியோர் ஸ்கெட்ச் போட்டு மனோகரனை தூக்கி கடத்திச்சென்று கொலைசெய்து பழி தீர்த்துக்கொண்டு தனது நண்பன் தமிழ்செல்வன் கொல்லப்பட்ட புது ஆற்றில் தூக்கி வீசிவிட்டு சென்று விட்டனர்.

இன்று வெட்டிக்காடு புது ஆற்றங்கரையோரம் ஒதுங்கி இருந்த மனோகரன் சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்விற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த கொலையாளிகள் இளனி மணிகண்டன், கிரன், விஜய் ஆகிய மூன்று பேரும் பாபநாசம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.