accused
accused pt desk
குற்றம்

சென்னை: வாகனங்களை திருடி ஸ்பேர் பார்ட்ஸை மாற்றி மாற்றி வைத்து விற்பனை... 12 வாகனங்களுடன் மூவர் கைது!

webteam

வடசென்னை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக அதிகமான இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக யானைக்கவுளி காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்துள்ளன. இதையொட்டி புகார் கிடைத்த இடங்களில் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த விஷ்ணுவரதன் மற்றும் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரத்தீஷ் குமார், வேலூரைச் சேர்ந்த வெங்கடேசன் ஆகிய மூன்று பேரும் கூட்டணி அமைத்து இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.

police station

இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை ராயபுரம், மன்னடி, வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, காசிமேடு, போன்ற வடசென்னை பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி Second Hand-ல் விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் திருடிய இருசக்கர வாகனங்களை வேலூருக்கு கொண்டு சென்று வாகனத்தின் ஒவ்வொரு பாகங்களையும் தனித்தனியாக பிரித்து மாட்டி அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றி விடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் அதிகம் கேட்கும் இருசக்கர வாகனத்தை மட்டும் அதிகளவில் திருடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 12 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த யானைக்கவுளி போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.