குற்றம்

சென்னை: பெண் காவலர் வீட்டில் நகை கொள்ளை – கச்சிதமாக பிடித்த போலீஸ்

webteam

சென்னையில் பெண் காவலர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து 40 சவரன் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை புழல் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலரான பரிமளம் என்பவரது வீட்டில் கடந்த நவம்பரில் 17 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து புழல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அதேபோல, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான பெருமாள் என்பவரது வீட்டில் கடந்த 11-ஆம் தேதி 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

இதனயடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடிவந்த நிலையில், சந்தேகத்தின் பேரில், லட்சுமிபுரம் பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டன், ஸ்ரீபன், குழந்தைவேலு ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது, பெண் காவலர் மற்றும் தனியார் நிறுவன ஊழியர் ஆகியோரின் வீடுகளில் கொள்ளையடித்ததும், இவர்கள் 3 பேர் மீதும் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து 3 பேரிடம் இருந்து 40 சவரன் நகைகைளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்த புழல் காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.