குற்றம்

அரசுப் பேருந்தில் டிக்கெட் பரிசோதனையில் சிக்கிய கஞ்சா – 3 வடமாநில இளைஞர்கள் கைது

அரசுப் பேருந்தில் டிக்கெட் பரிசோதனையில் சிக்கிய கஞ்சா – 3 வடமாநில இளைஞர்கள் கைது

webteam

ஆம்பூரில் அரசுப் பேருந்தில் கடத்திய 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தில் முதல் நிலை டிக்கெட் பரிசோதகர் உமாபதி மற்றும் பிச்சை ஆகியோர் தலைமையிலான குழுவினர் டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த அரசு குளிர்சாதன பேருந்தில் ஏறி டிக்கெட் பரிசோதனை செய்தனர்.

அப்போது, 2 இளைஞர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருப்பதை உறுதி செய்த டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் உடனடியாக ஆம்பூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த ஆம்பூர் நகர காவல்துறையினர், 2 பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த சரத் மாலிக் மற்றும் ரஞ்சித் குமார் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்ததில் ஓசூர் பகுதியில் விநியோகிஸ்தர் ஒருவர் உள்ளதாக தெரிவித்தனர். அதன் பேரில் ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையிலான காவல்துறையினர் ஓசூருக்கு சென்று அங்கு இருந்த பல்ராம் மாலிக் என்பவரை கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து 3 பேர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா வழக்கில் 3 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.