குற்றம்

ஒரு தலைக்காதல்: நடுரோட்டில் இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

webteam

ஒரு தலைக்காதல் விபரீதத்தால் நடுரோட்டில் இளம் பெண் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி மான்சரோவர் பார்க்கில் உள்ள ராம்நகரை சேர்ந்தவர் ரியா கவுதம். வயது 21. விமான பணிப்பெண்ணாக விரும்பிய ரியா, கடந்த 5 -ம் தேதி ஓட, ஓட விரட்டி குத்தப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரியா மறுநாள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த பயங்கரம் தலைநகர் டெல்லியை உலுக்கியது. இதையடுத்து போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து குற்றவாளியை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் இந்தக் கொலையை செய்த அடில் பன்னே கான் (23) என்பவன் அவனது நண்பர்கள் ஜுனைத் சலிம் அன்சாரி (19), ராஜு அன்சாரி (18) ஆகியோருடன் மும்பையில் கைது செய்யப்பட்டான். இந்தக் கொலை ஒரு தலைக் காதலால் நடந்தது என்பது தெரியவந்துள்ளது.  தன்னுடன் பழகும்படி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்திருக்கிறான் அடில். பலமுறை ரியா எச்சரித்தும் அவன் கேட்கவில்லை. இதனால் வெறுத்துப்போன ரியா, ஏப்ரல் மாதம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பவத்தன்று அடில், ரியாவை வழிமறித்து பேசினான். ரியா கண்டித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் ரியாவை சரமாரியாகக் குத்தினான். அவனிடம் இருந்து தப்பிக்க மார்க்கெட்டில் உள்ள கடைக்குள் ரியா ஓடினார். விரட்டிச் சென்று குத்திவிட்டு அடில் நண்பர்களுடன் மும்பைக்குத் தப்பிவிட்டான். போலீசார் அவனை அங்கு கைது செய்துள்ளனர்.