கிருபா ஷங்கர்(50 வயது) என்ற கார் ஓட்டுநரிடமிருந்து அவரது வாகனம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து, அவரை கொலைசெய்த 3 பேரை டெல்லி காவல்துறையைச் சேர்ந்த மனித கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கிருபா ஷங்கர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி காணாமல் சென்றுவிட்டதாக அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். சில மாதங்களுக்குப் பிறகு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேந்தர் மாஜி என்பவரிடம் ஷங்கரின் கார் மற்றும் செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை தீவிரமாக கண்காணித்து போலீஸார் விசாரித்துள்ளனர்.
விசாரணையில், அவர் கார் மற்றும் செல்போனை தனது நண்வர் ஆஷ்ஃபாக் பெக்கிடமிருந்து பெற்றதாகக் கூறியிருக்கிறார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆஷ்ஃபாக் ஏற்கனவே மற்றொரு வழக்கில் கைதாகி காவலில் இருப்பது தெரியவந்துள்ளது. அவரை விசாரித்தபோது, அவருடைய நண்பரான ராம் தாருடன் சேர்ந்து, டிசம்பர் 2ஆம் தேதி சாரை கலே கான் பகுதியிலிருந்து ஓலா காரை பதிவு செய்ததாகவும், செல்லும் வழியில் ஜேவார் டோல் பிளாசா என்ற பகுதியில் அவரைக் கொன்றுவிட்டு ஆக்ராவில் உள்ள பிரை சோக் என்ற பகுதியில் புதைத்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
இதனால், செப்டம்பர் 4ஆம் தேதி அவரைக் கொலைவழக்கில் கைது செய்தனர். மேலும், குற்றப்பிரிவு டிசிபி மோனிகா பரத்வாஜ் தலைமையில் செப்டம்பர் 6ஆம் தேதி ராம் தாரையும் கைதுசெய்த போலீஸார், இந்த மூவரையும் காவலில் வைத்துள்ளனர். மேலும் கிருபா ஷங்கரின் உடலைத் தோண்டியெடுத்து குடும்பத்தாரிடம் ஒப்படைத்ததாகவும் மோனிகா கூறியுள்ளார்.