சென்னையில் கடந்த 4 நாட்கள் நடந்த போலீஸ் சோதனையில் 2750 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக செயின் மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து கொண்டே சென்றன. சென்னையில் உச்சகட்டமாக ஒரே நாளில் 14 செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. அத்தோடு மட்டுமல்லாது பைக் ரேஸ்களும் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது. முதல்வர் வீட்டின் அருகேயும், டி.ஜி.பி அலுவலகத்தின் அருகேயும் சட்ட விரோதமாக இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டனர். இதனையடுத்து குற்றச்சம்பவங்களை தடுக்க, போலீசார் ‘ஸ்டார்மிங் ஆப்ரேஷன்’ நடத்தினர். அதில் ஒரே இரவில் 1000 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து கடந்த 4 நாட்களாக போலீசார் இந்த சோதனையை நடத்தினர். இதுவரை 2750 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் நீதிமன்ற பிடியாணை கொண்டவர்கள் 68 பேரும், தலைமறைவு குற்றவாளிகள் 53 பேரும் பிடிபட்டனர். இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே இரவு பணி காவலர்களுடன் சேர்த்து ,கூடுதலாக இரண்டு "ஷிப்ட்" போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் வழக்கமாக இரவுப் பணியில் ஈடுபடும் காவலர்களை விட, கூடுதலாக இரவில் 6 துணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பை பலப்படுத்தினர். கூடுதலாக ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் இரண்டு உதவி ஆணையர் தலைமையில் 30 காவலர்கள், இரண்டு ஷிப்டுகளில் ரோந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு தொடர்ந்து காவலர்கள் சோதனையில் ஈடுபட்டால் தான் மக்கள் அச்சமின்றி நடமாட முடியும் என்பது பொதுமக்கள் கருத்தாக உள்ளது.