குற்றம்

நைட் முழுக்க போனில் பேசிய இளம்பெண்; காலையில் ரூம் மேட்டிற்கு காத்திருந்த அதிர்ச்சி!

JananiGovindhan

சென்னையை அடுத்த மதுரவாயலில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் செல்போனை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் நிஷா(21). இவர் சென்னையை அடுத்த மதுரவாயலில் உள்ள அடையாளம்பட்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

நிஷாவுடன் பணிபுரியும் லோகேஸ்வரி என்பரும் சேர்ந்து மதுரவாயல் லட்சுமி நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு நிஷா யாருடனோ நீண்ட நேரம் போனில் சாட்டிங் செய்து கொண்டிருந்தாராம். லோகேஸ்வரி தனது அறைக்கு சென்று தூங்க சென்றிருக்கிறார். இதனையடுத்து லோகேஸ்வரி காலையில் எழுந்து பார்த்த போது சமையல் அறையில் புடவையில் நிஷா தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார்.

அதைக் கண்டு அதிர்ச்சியுற்ற லோகேஸ்வரி, இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் நிஷாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், நிஷாவின் செல்போனை கைப்பற்றி தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.