குற்றம்

மும்பை: ஓடும் ரயிலில் கொள்ளையர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம்பெண்

Sinekadhara

மும்பையில் ஓடும் ரயிலில் நள்ளிரவில் 20 வயது பெண் ரயில் கொள்ளையர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ - மும்பை வரைசெல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலானது வெள்ளிக்கிழமை இரவு இகத்புரி மற்றும் கசாரா ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து மும்பை ஜிஆர்பி போலீஸ்கமிஷ்னர் “4 பேர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது” என அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

மேலும், சம்பவம் குறித்து, ‘’லக்னோ - மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் இகத்புரி ரயில் நிலையத்தில் நின்றபோது குற்றவாளிகள் ரயிலில் ஏறியிருக்கின்றனர். இவர்கள் டி -2 ஸ்லீப்பர் பெட்டியில் ஏறியபோது அங்கு 20 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கின்றனர். ரயில் கசாரா ரயில் நிலையத்தில் நின்றபோது பயணிகள் இதுகுறித்து தகவல் தெரிவித்ததன்பேரில் 4 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணை பெண் காவலர்கள் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அந்த பெண் நலமுடன் உள்ளார்.

முந்தைய ஆவணங்களை வைத்து விசாரித்ததில் குற்றவாளிகள் ஏற்கெனவே ரயில் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்திருக்கிறது. அவர்கள் இதுவரை ரூ.96,390 மதிப்புள்ள மொபைல்போன் உள்ளிட்ட பொருட்களை பயணிகளிடமிருந்து திருடியிருக்கின்றனர். அதில் ரூ. 34,200 மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தற்போது குற்றவாளிகள்மீது இந்திய சட்டப்பிரிவுகள் 395, 397, 376(டி), 354 மற்றும் 354(பி) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்திருக்கிறார்.