குற்றம்

நாடோடிகள் பட பாணியில் பெண்ணை கடத்த முயற்சி - கடைசியில் பொதுமக்கள் வைத்த செக்!

webteam
திருத்தணி அருகே பெண் கேட்டு தரமறுத்ததால் கடைக்கு தாயுடன் வந்த பெண்ணை கடத்திய 2 பேரை 8 கிலோ மீட்டர் தூரம் பொதுமக்களும் காவல்துறையினரும் விரட்டிச்சென்று பிடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு தாலுக்காவிற்குட்பட்ட கொடிவலசா கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரின் மனைவி மஞ்சுளா மற்றும் மகள் ஷியாமளா ஆகிய இருவரும் பள்ளிப்பட்டில் உள்ள நகைக்கடைக்கு சென்றுவீட்டு மீண்டும் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சாமிநாயுடு கண்டிகை என்ற இடத்தில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது, வழிமடக்கிய 2 பேர் ஆட்டோவில் இருந்த ஷியாமளாவை அங்கே நிறுத்தி வைத்திருந்த அம்பாசிடர் காரில் ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் மஞ்சுளா கூச்சலிடவே அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததுடன் காரை விரட்டிச்சென்றனர். கிட்டத்தட்ட 8 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச்சென்று தமிழக - ஆந்திர மாநில எல்லையோரப் பகுதியான பொதனப்பள்ளி அருகே காரை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அத்திமாஞ்சேரி பேட்டையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவருக்கு ஷியாமளாவை பெண் கேட்டுச்சென்றதும், ஆனால் பெண் தர மறுத்ததால் நண்பர் விஜய்யுடன் சேர்ந்து பெண்ணை கடத்தியதும் தெரியவந்தது.
இதனையடுத்து ஜெயக்குமார், விஜய் ஆகிய 2 பேரையும் கைதுசெய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் கேட்டு தர மறுத்ததால் பெண்ணை காரில் கடத்தியதும், அவர்களை 8 கி.மீ தூரம் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.