குற்றம்

வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி 2 பெண்கள் கொலை - பழிக்குப் பழி சம்பவம்.!

webteam

நாங்குநேரி அருகே பழிக்குப் பழியாக வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

நெல்லை மாவட்டம் மறுகால் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் நம்பி. இவர் அதேபகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பெண்ணின் அண்ணனை அவரது நண்பர்கள் கிண்டல் செய்ததால் நம்பி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்.

அதற்கு பழியாக நம்பியின் தரப்பினர் பெண்ணின் அண்ணனையும் தந்தையும் கொலை செய்து விட்டு சிறைக்கு சென்று விட்டு சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தனர்.

இந்நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் பழி வாங்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஜாமினில் வெளியே வந்தவர்களை கொலை செய்யும் முயற்சியோடு பெண்ணின் வீட்டார் நம்பியின் வீட்டில் புகுந்து நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். மேலும் வீட்டில் இருந்த ஆண்கள் தப்பியோடியதால் நம்பியின் உறவினர்கள் சண்முகதாய், சாந்தி ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இச்சம்பவத்தில் 8 பேர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.