குற்றம்

சென்னை: ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி கொலை - விசாரணை நடத்த 2 தனிப்படைகள் அமைப்பு

Sinekadhara

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கு குறித்து விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை கிண்டி அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(23). அதே பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (20). இவர் தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சதீஷ் சத்யாவை ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இன்று இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்து உள்ளனர். அந்தப் பெண் சதீஷின் காதலை ஏற்க மறுத்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வாக்குவாதம் ஆகியுள்ளது. அப்போது பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சதீஷ் சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார்.

இதில் ரயிலில் சிக்கி சத்யாவின் தலை துண்டாகி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இதற்கிடையே சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க காவல்துறை 2 தனிப்படைகள் அமைத்துள்ளன. காவல் ஆய்வாளர் செல்லப்பா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படைகள் தலைமறைவாகியுள்ள சதீஷை தீவிரமாக தேடிவருகின்றனர். சதீஷின் வீட்டிற்கு சென்றுள்ள போலீசார் அவருடைய பெற்றோரிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவரது செல்போன் எண்ணையும், சிசிடிவி காட்சிகளையும் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.