குற்றம்

டெல்லி: 8 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - இரண்டு சிறுவர்கள் போக்சோவில் கைது

Sinekadhara

டெல்லியில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 11 மற்றும் 12 வயது சிறுவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு டெல்லியில் தனது பெற்றோருடன் வசித்துவரும் 8 வயது சிறுமி, திங்கட்கிழமை மாலை தனது நண்பர்களுடன் விளையாட வெளியே சென்றிருக்கிறார். அப்போது அதே பகுதியில் வசித்துவரும் 12 வயது சிறுவன் தன்னுடன் விளையாட வருமாறு அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறான்.

பிறகு வீட்டிற்குத் திரும்பிவந்த சிறுமி தனது பெற்றோரிடம் தனக்கு வயிறு மிகவும் வலிப்பதாகக் கூறி அழுதிருக்கிறார். குழந்தையை பரிசோதித்துப் பார்த்ததில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் போலீசில் புகார் அளித்திருக்கின்றனர். சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போலீசார் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதை உறுதி செய்தனர். தற்போது அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிறுமியின் வீட்டின் அருகேயுள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த போலீசார் 12 வயது சிறுவன் மற்றும் 11 வயது சிறுவன் இருவரும் இந்த குற்றத்தில் ஈடுபட்டதைக் கண்டறிந்தனர். அவர்கள்மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயிருக்கு போராடிய நிலையில் சிறுமி சிகிச்சை பெற்றுவருவதால் சிறுவர்கள் இருவரையும் உடனடியாக கைதுசெய்ய டெல்லி போலீஸ் கமிஷ்னர் உத்தரவிட்டதன்பேரில் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.