கைதானவர்கள்
கைதானவர்கள் pt desk
குற்றம்

தேனி: காதலை கண்டித்த தந்தையை கொலை செய்ய முயன்ற 16 வயது மகள் உட்பட 4 பேர் கைது

webteam

தேனி அருகே தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த சிறுமியொருவர், காதலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக சிறுமியை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பாட்டி, சிறுமியை அழைத்துக் கொண்டு சங்கரன்கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டில் ஒரு மாதமும், பெரியகுளத்தில் உள்ள உறவினர் வீட்டில் ஒரு மாதமும் தங்கியுள்ளார்.

arrested

இதில் அந்த சிறுமி பெரியகுளத்தில் தங்கியிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு இளைஞருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் வெளியூர் பயணங்கள் செய்ததாக சொல்லப்படும் நிலையில், அதையறிந்த தந்தை மீண்டும் மகளை கண்டித்து, தன் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று வேறொரு தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பில் சேர்த்து படிக்க வைத்துள்ளார்.

இருப்பினும் அந்த இளைஞர், சிறுமியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துவந்துள்ளார். இந்த விஷயம் சிறுமியின் தந்தைக்கு தெரியவந்ததையடுத்து மீண்டும் கண்டித்துள்ளார் அவர். இதையடுத்து அந்த இளைஞரும் சிறுமியும், சிறுமியின் தந்தையை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இச்செயலுக்கு இளைஞரின் நண்பர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். அதன்படி அவர்கள் அனைவரும் சிறுமியின் தந்தையை வழிமறித்து கீழே தள்ளி அரிவாளால் தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் அவர்கள்.

Police

காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமியின் தந்தை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமி, சம்பந்தப்பட்ட இளைஞர் மற்றும் அவரின் 2 நண்பர்கள் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்த போலீசார், தேனி சிறையில் அடைத்தனர். காதல் விவகாரத்தை கண்டித்த தந்தையை, பெற்ற மகளே கொலை செய்ய முயன்ற சம்பவம் தேனியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.