குற்றம்

2 பேர் கொலை; 16 கிலோ நகை கொள்ளை - சீர்காழியில் அதிர்ச்சி சம்பவம்!

webteam

மயிலாடுதுறை அருகே நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொலை செய்துவிட்டு 16 கிலோ நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியில் வசிப்பர் வடநாட்டைச் சேர்ந்த தன்ராஜ். இவர் அதேபகுதியில் அடகுக்கடை நடத்தி வருகிறார். மேலும், மொத்த நகை வியாபாரியாகவும் இருந்து வருகிறார். இவர் தனது மனைவி ஆஷா, மகன் அகில், மருமகள் நிகில் ஆகியோர் ஒன்றாக வசித்து வந்தனர். இன்று அதிகாலை 6.30 மணியளவில், தன்ராஜ் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் 4 பேரையும் கொடூரமாக தாக்கியதாக தெரிகிறது.

இதில் தன்ராஜின் மனைவி ஆஷா, மகன் அகில் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தன்ராஜும் அவரது மருமகள் நிகிலும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தன்ராஜ் வீட்டில் இருந்து 16 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மேலும் காரையும் மர்ம கும்பல் திருடி சென்றுள்ளனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் வடநாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.