குற்றம்

புதுச்சேரி: கல்லூரி மாணவி கொலை செய்த விவகாரம் - கொலையாளிக்கு உதவிய 15 வயது தம்பி கைது

webteam

புதுச்சேரியில் நேற்று முந்தினம் இரவு கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய நிலையில், கொலை சம்பவத்தில் கொலை செய்தவரின் 15 வயது தம்பியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி அருகே உள்ள பொறையூர் சுடுகாட்டில் நேற்று முந்தினம் இரவு சந்தை புதுக்குப்பத்தை சேர்ந்த ராஜஸ்ரீ (17) என்ற கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி மர்ம நபர்கள வீசி சென்றனர். இது தொடர்பாக வில்லியானுர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி ராஜஸ்ரீ பொறையூர் பகுதியை சேர்ந்த பிரதீஷ்(19) என்ற இளைஞரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததும், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ராஜஸ்ரீ, பிரதீஷ் உடனான பேச்சுவார்த்தையை முற்றிலுமாக நிறுத்தி கொண்டதும் தெரியவந்தது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் பிரதீஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

அதாவது, பிரதீஷ் ராஜஸ்ரீயை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பொறையூர் சுடுகாட்டின் அருகே பீர் பாட்டில் மற்றும் உருட்டை கட்டையால் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும். கொலைக்கு வேறு யாரேனும் உதவி செய்தார்களா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த கொலை சம்பவத்தில் பிரதீசுக்கு அவரது 15 வயது தம்பி உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.