குற்றம்

குழந்தைக்காக கட்டியிருந்த புடவை தொட்டிலில் கழுத்து இறுக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு

நிவேதா ஜெகராஜா

குன்றத்தூரில் குழந்தைக்கு கட்டிய புடவையால் செய்த தொட்டிலில், 15 வயது சிறுவனொருவன் கழுத்து இறுக்கி உயிரிழந்துள்ளார். பள்ளி விடுமுறைக்கு உறவினர் வீட்டிற்கு சென்றபோது அவருக்கு இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

திருவொற்றியூர், விம்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாசம். இவரது மகன் தீபக் (வயது 15). ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார் தீபக். பள்ளி விடுமுறை என்பதால் குன்றத்தூர், மணிகண்டன் நகர் பகுதியில் உள்ள அவரது உறவினர் மணிமாறன் என்பவரது வீட்டிற்கு தம்பி விக்னேஷ் உடன் சென்றிருந்திருக்கிறார் தீபக். மணிமாறனுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருந்த நிலையில், குழந்தையை தூங்க வைப்பதற்காக வீட்டினுள் புடவையால் தொட்டில் கட்டியுள்ளனர். 

இந்நிலையில் தீபக் மற்றும் அவரது தம்பி விக்னேஷ் இருவரும் தொட்டில் கட்டி உள்ள அறையில் இருந்துள்ளனர். வெகுநேரமாக சிறுவர்கள் அறையில் இருந்த நிலையில், மணிமாறன் சந்தேகத்தில் அந்த அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது சிறுவன் தீபக், குழந்தைக்கு கட்டிய புடவை தொட்டிலில் கழுத்து இறுக்கி தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் அலறியுள்ளார். சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர், தீபக்கை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தீபக் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து குன்றத்தூர் போலீசார், தீபக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விசாரணை செய்த போது குழந்தைக்கு கட்டிய புடவை தொட்டிலில் விளையாடும் போது கழுத்து இறுக்கி தீபக் இறந்து போனது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.