Accused
Accused pt desk
குற்றம்

நாமக்கல்: வலி நிவாரண மாத்திரைகளை நீரில் கரைத்து போதை ஊசியாக பயன்படுத்திய நபர்கள் கைது...

webteam

செய்தியாளர்: L.M. மனோஜ் கண்ணா

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே உள்ள சாமுண்டூர் மயான முட்புதற்களில் போதை மாத்திரைகளும் ஒருமுறை பயன்படுத்தும் போதை ஊசிகளும் இருப்பதாக வெப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சில இளைஞர்கள் இரவு நேரங்களில் திரண்டு போதைக்காக மாத்திரையை நீரில் கரைத்து ஊசியாக செலுத்திக் கொள்வது தெரியவந்தது. இதுகுறித்து வெப்படை போலீசார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

வெப்படை காவல் நிலையம்

இதையடுத்து, 10 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தினர். இதில் பள்ளிபாளையம் மற்றும் வெப்படை பகுதியில் உள்ள சில இளைஞர்கள் மற்றும் கட்டட வேலைக்குச் செல்லும் கூலித் தொழிலாளர்கள் ஆகியோர், ஆன்லைன் மூலம் பெறப்படும் வலி நிவாரண மாத்திரையை நீரில் கரைத்து ஊசி மூலம் தங்கள் கைகளில் செலுத்திக் கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து சந்தேகத்தின் பேரில், கிரி ஹரண், சுஜித், கௌரி சங்கர், தீபன், நந்தகுமார் உள்ளிட்ட சுமார் 15 கட்டட கூழிதொழிளார்கள் மற்றும் இளைஞர்களை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் வலி நிவாரண மாத்திரையை போதைக்காக பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டனர் ஆன்லைன் மூலம் பெற்ற மாத்திரைகளை ஒருவருக்கொருவர் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடம் இருந்து சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய, 10 ஆயிரம் வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

வெப்படை காவல் நிலையம்

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 15 பேரையும் குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மாலதி முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.