குற்றம்

வேலூரில் 144 கிலோ வெள்ளி பறிமுதல்

Sinekadhara

வேலூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுசெல்லப்பட்ட 144 கிலோ வெள்ளி, ரூ.32 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் சென்ற ரயில் காட்பாடி வந்தபோது ரயில்வே போலீஸார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணமாக பதிலளித்ததால் அவர்கள் கொண்டுவந்த பைகளை போலீஸார் சோதனையிட்டனர். அப்போது கட்டிகட்டியாக வெள்ளியும், வெள்ளி ஆபரணங்களும், ரூ.32 லட்சம் ரொக்கமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், சேலத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், நித்தியானந்தம், பிரகாஷ், சுரேஷை வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். கடத்திவந்த வெள்ளிக்கட்டிகள் 144 கிலோ மற்றும் நகைகளின் மதிப்பு ரூ.1.05 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.