குற்றம்

14 வயது சிறுமிக்கு வன்கொடுமை: கைதான 43 வயது கராத்தே மாஸ்டர் சொன்ன பகீர் வாக்குமூலம்

webteam

கராத்தே சொல்லித் தருவதாகக் கூறி 14 வயது சிறுமியை கடந்த ஒரு வருடமாக பாலியல் வன்கொடுமை செய்த கராத்தே மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசு பள்ளியொன்றில் படிக்கும் 14 வயது சிறுமியை காணவில்லை என அவரின் பெற்றோர், அவர்கள் பகுதியிலுள்ள மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஒன்றாம் தேதி புகார் அளித்தனர். அப்போது சிறுமியின் பெற்றோருடன், சிறுமியின் கராத்தே மாஸ்டர் ஒருவரும் புகார் அளிக்க சென்றுள்ளார். அவர், சிறுமியை கண்டுபிடிக்க வேண்டும் என அதிக முனைப்புடன் அந்த இடத்தில் செயல்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், பெற்றோர்கள் புகார் அளித்த சிலமணி நேரத்திலேயே சிறுமி வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து சிறுமியிடம் திருமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டின் அருகே இருந்த கோபி என்ற இளைஞருடன் புத்தாண்டை கொண்டாடுவதற்காக மெரினா கடற்கரைக்குச் சென்று விட்டு, தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இளைஞருடன் எதற்காக சென்றாய் என பெற்றோர் அதட்டி கேட்டபோது தான், கராத்தே மாஸ்டரின் பாலியல் தொல்லைகள் குறித்து சிறுமி தெரிவித்துள்ளார். அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் சிறுமி கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டின் அருகே உள்ள கராத்தே பள்ளியில் கராத்தே பயிற்சி எடுத்து வந்துள்ளார். அந்த பள்ளியை கராத்தே மாஸ்டர் உதய கருணாநிதி (43) என்பவர் நடத்தி வருகிறார். இந்த பள்ளியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் கராத்தே கற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் இம்மாணவி.

கராத்தே பயிற்சி வகுப்புக்கு செல்லும் போதெல்லாம், கிட்டத்தட்ட கடந்த ஓராண்டாக அங்கிருந்த கராத்தே மாஸ்டர் உதய கருணாநிதி, தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக சிறுமி தெரிவித்திருக்கிறார். மேலும் பாலியல் வன்கொடுமை செய்தவுடன் சிறுமியிடம் 200 ரூபாய் பணம் கொடுத்து இது பற்றி யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி இருக்கிறார். கராத்தே மாஸ்டரின் பாலியல் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காகவே கோபி என்ற இளைஞருடம் பழகியதாக மாணவி தெரிவித்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த கராத்தே மாஸ்டர், சிறுமியின் நலனில் அக்கறை உள்ளவர் போல் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து கராத்தே மாஸ்டர் உதய கருணாநிதியிடம் விசாரணை நடத்திய போது, அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பது தெரிந்து வந்தது. மேலும் சிறுமியை பாலியல் சீண்டல் மற்றும் வன்கொடுமை செய்ததை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். சிறுமையை தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்