குற்றம்

கண்டித்த உடற்கல்வி ஆசிரியர்.. விபரீத முடிவு எடுத்த பிளஸ்-2 மாணவர்

webteam

சென்னையில் 12ம் வகுப்பு பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பள்ளி முதல்வர் உட்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை கொட்டிவாக்கத்தில் செயல்பட்டு வரும் நெல்லை நாடார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த கவின்குமார்(17), என்ற மாணவர் கூல் லிப், புகையிலை பொருட்களை பயன்படுத்தியதாக கூறி உடற்கல்வி ஆசிரியர் கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பள்ளி மாணவன் சின்ன நீலாங்கரை, சிங்கார வேலர் தெருவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆத்திரமடைந்த உறவினர்கள் பள்ளிக்கு சென்று உடற்கல்வி ஆசிரியரை தாக்கினர். இதன் காரணமாக பள்ளி இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பள்ளியில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

மகன் இறப்பிற்கு காரணமான உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேசன், வகுப்பு ஆசிரியர் செல்லபாண்டி, பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாணவரின் தந்தை மகேஷ் நீலாங்கரை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் 305 பிரிவின் கீழ் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நீலாங்கரை போலீசாரிடம் கேட்ட போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.