குற்றம்

கன்னியாகுமரி: ஏடிஎம் காலாவதியாகி விட்டதாக கூறி ஓய்வு பெற்ற விஞ்ஞானியிடம் ரூ12 லட்சம் மோசடி

webteam

கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் அருகே ஓய்வு பெற்ற விஞ்ஞானியிடம் ஏடிஎம் காலாவதியாகி விட்டதாக கூறி நூதனமுறையில் 12 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் ஆன்லைன் மோசடியாளர்கள் கைவரிசை அதிகமாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த பாகோடு அருகே கொழவிளை பகுதியை சேர்ந்தவர் பாலாசிங். தேசிய வானூர்தி ஆய்வகத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி லிலிதா. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். மகன் திருமணமாகி அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில், வயதான பாலாசிங்-லலிதா தம்பதியர் வீட்டில் தனித்து வசித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலையில் இவர்களது வீட்டு தொலைபேசியில் அழைந்த மர்மநபர் ஒருவர் தாங்கள் வங்கியிலிருந்து பேசுவதாகவும் மூத்தகுடிமக்களாததால் உங்களின் ஏடிஎம் காலாவதியாகிவிட்டது என்றும் புதிய ஏடிஎம் அட்டை வழங்குவதாகவும் அதற்கு உங்கள் கையிலிருக்கும் ஏடிஎம் அட்டையின் 16இலக்க எண்ணை கேட்டுள்ளனர். தொடர்ந்து ஏடிஎம் அட்டையின் இரகசிய குறியீட்டு எண்ணையும் பெற்றுகொண்டவர்கள் பாலாசிங்கின் மொபைலுக்கு ஓடிபி அனுப்பியுள்ளதாகவும் அதன் குறியீடுகளை கூறவேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 21முறை ஓடிபி குறியீடுகளை அனுப்பி முதிய தம்பதியரிடம் மொபைலில் அழைத்து தெரிந்துகொண்ட மர்மநபர் அத்துடன் போனை துண்டித்துள்ளார்.

அதை தொடர்ந்து சந்தேகமடைந்த பாலாசிங்-லலிதா தம்பதியர் மார்த்தாண்டம் அருகே உள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் சென்று தங்களது வங்கி கணக்குகளை சரிபார்த்தனர். அப்போது தங்கள் வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 12லட்சம் பறிபோனதை அறிந்துள்ளனர். இது குறித்து மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் பாலாசிங்-லலிதா தம்பதியர் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து வழக்குபதிவு செய்த மார்த்தாண்டம் காவல்துறையினர் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையின் உதவியுடன் ஆன்லைன் கொள்ளையனை தேடிவருகின்றனர்.

இதேபோல் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியரின் வங்கி கணக்கிலிருந்து 3.5லட்சம் ரூபாயும் குழித்துறை பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரது வங்கி கணக்கிலிருந்து 19ஆயிரம் ரூபாயும் மோசடி செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.