குற்றம்

டியூஷன் டீச்சர் வர தாமதம் - காத்திருந்த சிறுமியை வன்கொடுமைக்கு ஆளாக்கிய 58 வயது வாட்ச்மேன்

Sinekadhara

11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 58 வயது நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

பெண் பிள்ளைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நீதிமன்றங்கள் சில அதிரடியான தீர்ப்புகள் மற்றும் தண்டனைகளை வழங்கினாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை என்றுதான் சொல்லவேண்டும். மும்பை டோங்க்ரி காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றத்தில் 58 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதன்கிழமை மாலை 11 வயது சிறுமி டியூஷனுக்காக சென்றுள்ளார். டியூஷன் ஆசிரியை வர தாமதமாகவே சிறுமி தனியாக நின்றுள்ளார். நீண்டநேரம் சிறுமி ஒருவர் தனியாக நிற்பதை கவனித்த 58 வயது வாட்ச்மேன் ஒருவர் சிறுமியிடம் பேசி, ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை தனது பாலியல் இச்சைக்கு ஆளாக்கியுள்ளார்.

டியூஷன் ஆசிரியை அங்கு வந்ததும் சிறுமி தனக்கு நேர்ந்ததை ஆசிரியையிடம் கூறியுள்ளார். உடனடியாக ஆசிரியை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, உடனடியாக அங்குவந்த போலீசார் குற்றவாளியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இதுகுறித்து அந்த நபரிடம் மேலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், அந்த நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், துப்ரியில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபருக்கு அம்மாவட்ட நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோன்றதொரு கடுமையான தீர்ப்பு இந்த வழக்கிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.