குற்றம்

நெல்லை: தின்பண்டத்தை திருடியதாக 10 வயது சிறுமியை தீவைத்து எரித்த வளர்ப்பு தந்தை

Sinekadhara

பணகுடியில் தின்பண்டத்தை திருடியதாக 10 வயது சிறுமியை மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளார் கொடூர வளர்ப்புத் தந்தை.

நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்த சுஜா என்பவருக்கும் குருநாதன் என்பவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு குருநாதன் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து சுஜா தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். சுஜாவும் அந்தோணிராஜும் காவல்கிணற்றில் உள்ள ஒரு ஹோட்டலில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சுஜாவின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தைகளான மாதேஷ், மகராசி, மகேஸ்வரி ஆகிய 3 பேரும் தின்பண்டம் வாங்க காவல்கிணற்றில் உள்ள பேக்கரிக்குச் சென்றுள்ளனர். கடைக்காரருக்குத் தெரியாமல் 3 பேரும் சேர்ந்து கையில் கொண்டுசென்ற பையில் 2 சிப்ஸ் பாக்கெட்டுகளை எடுத்துப் போட்டுள்ளனர். இதனை கவனித்த கடைக்காரர் அவர்களை மிரட்டி அனுப்பியுள்ளார். இதனை கவனித்த கடையில் வேலையும் ஊழியர், சுஜாவின் இரண்டாவது கணவர் அந்தோணிராஜியிடம் இதுபற்றி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தோணிராஜ் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து 3 குழந்தைகள் மீதும் ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது மாதேஷ், மகராசி இரண்டு பேரும் தப்பித்து ஓடிவிட்டனர் .

ஆனால் 10 வயதான மகேஸ்வரி தீயில் சிக்கிக்கொண்டார். தன்னை காப்பாற்றுமாறு தீ கொளுத்திய அந்தோணிராஜிடம் மன்றாடி உள்ளார். ஆனால் அதற்குள் தீ உடல் முழுவதும் பரவியது. 90 சதவீத தீக்காயங்களுடன் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆபத்தான நிலையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தோணிராஜிக்கும் லேசான தீ காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.