கொரோனா வைரஸ்

போக்குவரத்துத்துறை ஊழியர்கள் தடுப்பூசி சான்றிதழ்களை சமர்பிக்க உத்தரவு

நிவேதா ஜெகராஜா

போக்குவரத்துத்துறை ஊழியர்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க அத்துறை சார்பில் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “தடுப்பூசி செலுத்தத் தவறியவர்களின் விவரம் மாவட்ட நிர்வாக ஆய்வு மூலம் கண்டறியப்படும்போது, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட போதிலும், ஒரு சில பணியாளா்கள் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. இவர்கள் அனைவரும் நடக்கும் சிறப்பு தடுப்பூசி முகாம்களில் கலந்துக்கொண்டு தடுப்பூசியை உடனே செலுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா தடுப்பூசி ஏற்கெனவே செலுத்திக் கொண்ட பணியாளா்கள் மற்றும் இனி வரும் நாள்களில் தடுப்பூசி செலுத்தும் பணியாளா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான முதல் மற்றும் இரண்டாம் தவணைச் சான்றிதழை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும். இதனிடையே மாவட்ட நிா்வாகம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும்போது தடுப்பூசி செலுத்தாதவா்கள் கண்டறியப்பட்டால், அந்த ஊழியா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மீண்டும் கண்டிப்பான எச்சரிக்கை விடுக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளது.